Subbiahpatturajan
பிரான்டி வுல்ஃப் மூன்று வயதான அழகான பெண் குழந்தை. அவளுடைய தாய் இருபத்தெட்டு வயதான ரெபேக்கா காலீன் கிறிஸ்டி, விவாகரத்து ஆனவள். தாயுடைய பொழுது போக்கு இணையத்தில் கேம்ஸ் விளையாடுவது. சாதாரணமாக விளையாடத் துவங்கிய அவளை கொஞ்சம் கொஞ்சமாய் விளையாட்டு உள்ளிழுத்துக் கொண்டது. சாப்பாடு, தூக்கம் எல்லாவற்றையும் மறந்து விளையாடத் தொடங்கினாள். அவள் மறப்பதோடு நின்று விடாமல் குழந்தைக்கும் சாப்பாடு போட மறந்து விடுவாள் என்பது தான் துயரம்.
தாய் விளையாடிக் கொண்டிருப்பாள், குழந்தை எதுவுமே இல்லாமல் பட்டினியில் வாடி வதங்கும். தண்ணீரோ, சாப்பாடோ எதுவும் இல்லாமல் கையில் என்ன கிடைக்கிறதோ அதை குழந்தை சாப்பிடும், நாய் உணவு உட்பட! குழந்தை மெலிந்து மெலிந்து எடை குறைந்து எலும்பும் தோலுமாகி விட்டது.
ஒருநாள் விளையாட்டின் மும்முரத்தில் இருந்தாள் தாய். மதியம் ஆரம்பித்த விளையாட்டு மாலை, இரவு என தொடர்ந்தது. இடைவெளியில்லாமல் அதிகாலை மூன்று மணி வரைக்கும் விளையாடினாள். விளையாடிவிட்டு விருப்பமேயில்லாமல் எழுந்து வந்தவள் குழந்தை மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனாள்! பசியினால் வாடி வதங்கிய அந்த மூன்று வயது தேவதை இறந்து போயிருந்தது!
அவளுக்கு 25 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். “ஐயோ.. என்னுடைய குழந்தையை இழந்து விட்டேனே, பார்க்கணும் போல இருக்கே..” என கோர்ட்டில் அழுது புலம்பினாள் ரெபேக்கா. இப்போது அழுது என்ன செய்ய? போன உயிர் போனது தானே!
“இன்டர்நெட்ல கொஞ்சநேரம் விளையாடினா என்ன ஆகப் போகுது”?
என்கிற இந்த வார்த்தைகள் தான் இந்த இணைய மோகம் ஆரம்பிக்கும் முதல் படி.. அச்சு அசலாய் புகைப் பழக்கம் எப்படி ஆரம்பிக்குமோ அதே போல! ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமே என ஆரம்பிக்கும் பழக்கம் இழுப்பவரை இழுத்துக் கொள்ளும். அதே போல தான் இதுவும்.
முதலில் கொஞ்ச நேரம், அப்புறம் நினைப்பதை விட அதிக நேரம். அப்புறம் நாள் முழுக்க. தூக்கம் இல்லாமல், வேலை செய்யாமல், சாப்பாடு இல்லாமல் என அது விரிவடையும். இந்த மோகம் எந்த நிலைக்கும் போகலாம் என்பதற்கு ரெபேக்கா ஒரு சின்ன உதாரணம்.
இணையதளம் எனும்வரப்பிரசாதம்
இணையம் ஒரு அற்புதமான சாதனம் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். குறிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வமுடையவர்கள், பிறரோடு தொடர்பில் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள், கலைஞர்கள், செய்தியாளர்கள் இவர்களுக்கெல்லாம் இணையம் வரப்பிரசாதம். இணைய நன்மைகளைப் பட்டியலிட்டால் தனியே நான்கு புத்தகம் எழுதவேண்டி வரும்.
பாலையும், நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் குடிக்கும் இலக்கிய அன்னப் பறவையாய் நாம் இருந்தால் அற்புதம்! தவறுகளை நோக்கிப் போனாலோ, அல்லது அளவுக்கு மீறிப் பயன்படுத்தினாலோ ஆபத்து சர்வ நிச்சயம்.
“இணையத்தைப் பயன்படுத்துவோரில் ஐந்து முதல் பத்து சதவீதம் வரையிலானவர்கள் தாங்கள் இணையத்துக்கு அடிமையானதை உணர்கிறார்கள்” என்கிறார் ஜெர்மி லாரன்ஸ் எனும் உடல்நல எழுத்தாளர்.,,
இணயத்தில் மெதுவாக சேட் செய்ய ஆரம்பிப்போம். பிறகு எப்போதும் கணினியின் ஓரத்தில் ஒரு சேட் வின்டோ இருந்தால் தான் வேலை ஓடும் எனும் நிலை வரும். பெரும்பாலானவர்களுக்கு எதிர் பாலினருடன் செக்ஸ் உரையாடல் நடத்துவதில் நேரம் போவதே தெரியாது.
கடந்த சில ஆண்டுகளாக முன்னணியில் இருப்பவை ஃபேஸ் புக், டுவிட்டர், வாட்ஸப், யூடியூப் போன்ற சமூக வலையமைப்புகள். இதில் நண்பர்களை கண்டுபிடிப்பது, அவர்களோடு பேசுவது. புது நபர்களைத் தேடுவது, அவர்களுடன் கதைப்பது என நேரம் போவதே தெரியாமல் விளையாட்டு களைகட்டும். வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் எல்லாமே பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை உரிமைகள் கூட குடிஎன்னும் அரக்கனால் மறந்துப்போகும்
பாலியல் கதைகள், படங்கள், வீடியோக்கள் கேம்ஸ் என மாட்டிக் கொள்பவர்கள் கதி ரொம்பப் பரிதாபம். அது ஒரு பெர்முடா முக்கோணம் போல. எட்டிப் பார்த்தாலே இழுத்துக் கொள்ளும் சிக்கலான விஷயம். இணைய உலகின் இன்றைய கணக்குப் படி சுமார் இரண்டரை கோடி பாலியல் வலைத்தளங்கள் உள்ளன. ஒவ்வொரு வினாடியும் சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய்கள் இதற்காய் செலவிடப்படுகின்றன. தேடுதல் தளங்களில் 25 சதவீதம் பாலியல் தேடல்களே! தரவிறக்குகளில் 35 சதவீதம் பாலியல் சார்ந்தவையே!
இந்தப் புள்ளிவிவரங்களே போதும் இணைய உலகை பாலியல் எவ்வளவு ஆழமாய்ப் பாதித்திருக்கிறது என்பதை உணர. இதில் மாட்டிக் கொள்பவர்கள் தங்கள் நேரம், வாழ்க்கை, குடும்ப உறவுகள் என எல்லாவற்றையுமே இழந்து விடும் அபாயம் உண்டு.
கருத்துகள்