சுப்பியபட்டுராஜன்
ஒரு தனிநபர் ஆட்சி செய்தால், அவரை எதிர்த்து இன்னொரு நபரோ அல்லது நபர்களோ போராடி வென்றுவிடலாம்.
ஒரு கட்சி ஆட்சி செய்தால், அந்த கட்சியை எதிர்த்து மக்களோ அல்லது இன்னொரு எதிர்க்கட்சியோ போராடி வென்று விடலாம்.
ஒரு கொள்கை ஆட்சி செய்யும்போது, அந்த கொள்கையை எதிர்த்துத்தான் போராட வேண்டுமே தவிர, தனி நபரையோ அல்லது ஒரு கட்சியையோ எதிர்த்து போராடுவது எப்படி வெற்றி தரும்?
தற்போது ஆட்சியில் இருப்பது, மோடியோ அல்லது பா.ஜ.க. வோ அல்ல.
பிராமனீயம் என்னும் கொள்கை தான் ஆட்சி செய்கிறது. பிராமனீயம் என்பது பிராமணர்களை குறிக்கும் சொல் அல்ல.
பிராமணர்கள் தங்கள் சுயநலத்திற்காக உருவாக்கிய ஒரு தத்துவம் தான் பிராமனீயம். இதனை எண்ணத்தில் ஆழமாக பதித்து வைத்துள்ளவர்கள் தான் ஆட்சி செய்கின்றனர். எனவே தான் பிராமனீயம் ஆட்சி செய்கிறது என்கிறோம்.
இந்த ஆட்சி என்பது முதலமைச்சரையோ அல்லது பிரதமரையோ குறிக்கும் சொல் அல்ல.
ஒரு முதலமைச்சரை வருமான வரி குற்றத்திலோ அல்லது ஒரு ஊழல் வழக்கிலோ சிக்கி உள்ளே தள்ளி விட முடியும்.
மந்திரிக்களைத்தாண்டி, நீதித்துறை, நிதித்துறை, கல்வித்துறை, வெளியுறவுத்துறை, ஊடகத்துறை, உளவுத்துறை, நிர்வாகத்துறை, காவல்துறை, இராணுவம் என அனைத்தும் சேர்ந்தது தான் ஆட்சி.
இந்த ஆட்சியை தற்போது செய்துகொண்டிருப்பது தான் பிராமனீயம். இவர்கள் பிராமணர்கள் மற்றும் பிராமனீயத்தை தூக்கிப்பிடிப்பவர்கள்.
இவர்களை எதிர்த்து போராடும் நபர்கள் எல்லோரும் அதே பிராமணீய கொள்கையை ஆதரிப்பவர்களாக இருந்தால் போராட்டம் எப்படி வெற்றி பெரும்?
தற்போது ஆட்சியில் இருப்பது பிராமனீயக் கொள்கை. அதே கொள்கையுடையவர்கள் எப்படி போராட முடியும்?
பிராமனீயம், சமத்துவத்தை விரும்பாது. ஏனெனில் பிறப்பின் அடிப்படையில் ஒவ்வொருவரும் வெவ்வேறு உரிமைகளுடன் தான் பிறக்கிறார்கள் என்பதே அவர்கள் கொள்கை.
எல்லாம் அவரவர் தலைவிதி மற்றும் பூர்வ ஜென்ம பலன் படிதான் நடக்கும் என்பது அவர்கள் கொள்கை. ஏழைகளாய் இருப்பது அவரவர் தலைவிதி என நினைப்பவர்கள்.
இப்படிப்பட்ட ஒரு கொள்கையை எதிர்த்து போராட வேண்டுமென்றால் இன்னொரு கொள்கையால் தானே போராட முடியும்?
போராடும் உங்களுக்கும் பிராமனீய கொள்கை தானே இருக்கிறது?
பிராமணரை வைத்து திருமணத்திற்கு தேதி குறித்து, சாந்தி முகூர்த்தத்திற்கு தேதி குறித்து, குழந்தைக்கு பிராமணரை கேட்டு ஜாதகம் எழுதி, பெயர் சூட்டி, காது குத்தி, மொட்டையடித்து, எல்லா விஷயங்களுக்கும் பிராமணர்களை கேட்டு தேதி குறித்து, எல்லா திறப்பு விழாக்களுக்கும் பிராமணர்களை வைத்து பூஜை செய்து, புது வீட்டிற்கு செல்ல பிராமணர்களை வைத்து ஹோமம் வளர்த்து, அரசு சார்பாக கட்டப்படும் பாலங்களுக்கு கூட பிராமணர்களை வைத்து பூமி பூஜை செய்து விட்டு, அரசு சார்பாக வாங்கும் ஏவுகணைகளுக்கு கூட எலுமிச்சம்பழமும் பொட்டும் வைத்து பிராமணர்களை அழைத்து பூஜை செய்து விட்டு, அரசு மருத்துவமனைகளில் கூட ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு, மழை வேண்டி அரசாங்கமே பிராமணர்களை வைத்து யாகம் செய்து விட்டு, பிராமணர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி வழங்கும் நீதிமன்றங்களை பார்த்துக்கொண்டு, வீட்டை வாஸ்து சரியில்லை என பிராமணர்களை வைத்து பிராயச்சித்தம் செய்து விட்டு, கோவிலுக்கு போய் குனிந்து நின்று பிராமணர்களிடமிருந்து கைகூப்பி சாம்பலை வாங்கிக்கொண்டு, குழந்தைகளுக்கு பாலில்லாமல் செத்தாலும், சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து பிராமணனை வணங்கி விட்டு, செத்ததும் பிராமணனை வைத்து திவசம் செய்து விட்டு, பிறப்பு முதல் இறப்பு வரை பிராமனீயத்தை தாக்குப்பிடிக்கும் நீங்கள் எப்படி பிராமனீய கொள்கைக்கு எதிராக போராட முடியும்?
யாரை எதிர்த்து போராட வேண்டும், எதை எதிர்த்து போராட வேண்டும் என்ற புரிதல் கூட இல்லாமல் போராட்டம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
எந்த கொள்கை உங்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறதோ, அந்த கொள்கைக்குத்தான் நீங்களும் முட்டுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
புத்தரும், பெரியாரும், அம்பேத்கரும் எதை எதிர்த்து போராட வேண்டும் என துல்லியமாக புரிந்து கொண்டு, பிராமனீயத்தை எதிர்த்து போராடினர். வெற்றி கண்டனர்.
ஆனால், நீங்கள் பிராமனீயத்தை ஒரு கையில் தூக்கிப்பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் பிராமனீயக்கொள்கையின் விளைவுகளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஒரு கையில் துர்நாற்றம் அடிக்கும் அழுகிய பொருளை கையில் வைத்துக்கொண்டு, மறுகையில் வாசனை திரவத்தை தூக்கிக்கொண்டு அலைகிறீர்கள்.
எதிரி யாரென்றே தெரியாமல் போராடும் மக்களே!
உங்கள் கஷ்டங்களுக்கு காரணம் பிராமனீய கொள்கை தான்.
பிராமனீயம் வளர்வது இந்து மதத்தால் தான்.
இந்துக்களாய் இருந்து கொண்டு அந்த பிராமனீய கொள்கைக்கு வலு சேர்ப்ப்பதை முதலில் நிறுத்துங்கள்.
முதலில் பிராமனீய கொள்கையை உங்கள் மனதிலிருந்து தூக்கியெறியுங்கள்.
வீட்டை நிர்வகிக்கும் நீங்கள், பிராமணர்களை நீங்கள் வீட்டு காரியங்களுக்கு கூப்பிடுகிறீர்கள்.
நாட்டை நிர்வகிக்கும் அவர்கள், பிராமணர்களை நாட்டு காரியங்களுக்கு கூப்பிடுகிறார்கள். அவ்வளவு தான்.
மேலே குறிப்பிட்டுள்ள எல்லா வீட்டு நிகழ்வுகளுக்கும் பிராமணர்களை கூப்பிடுவதை முதலில் நீங்கள் நிறுத்துங்கள். பின்னர் மோடியை குறை சொல்லலாம்.
முதலில் போராட்டத்தை உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பியுங்கள். பிறகு நாட்டுப்பிரச்சினைக்கு போராடலாம்.
எதிரி யாரென்றே தெரியாமல் போராடுவது, barking at the wrong tree என ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
அதைத்தான் நாமும் செய்கிறோம் ஒவ்வொரு பிரச்சினையிலும்!
கருத்துகள்