Subbiahpatturajan
இந்துக்கள் இயல்பிலேயே தேசபக்தர்கள் என்கிறார் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத். இந்து ஆன்டி-இந்தியனா இருக்க முடியாது என்கிறார்.
கிமு 326 இல் இந்தியா என்ற ஒரு நாடு உருவாகவில்லை. இருந்தாலும் நாட்டுக்குள் அலெக்சாண்டர் ஊடுருவ சிந்து நதியின் மீது பாலம் அமைக்க உதவிய தட்சசீல மன்னன் ஆம்பி யார்?
கிபி 1192 இல் தனது மகள் பிருத்விராஜ் சவுகானுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாள் என்பதற்காக பிருதிவிராஜ் சவுகானை கோரி முகமதுவிடம் காட்டிக்கொடுத்த ராஜா ஜெயச்சந்திரன் கதை மோகன் பகவத்துக்கு தெரியாதா?
இன்றும் வடநாட்டில் ஜெயச்சந்திரன் என்றால், நமது ஊரில் எட்டப்பன் என்றால் என்ன பொருளோ அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ராஜா ஜெயச்சந்திரன் இந்து இல்லையா?
1857 சிப்பாய் கலக காலத்திற்கு வருவோம். ஜான்சி ராணியை காட்டிக்கொடுத்த குவாலியர் மகாராஜா ஜெயஜிராவ் சிந்தியா இந்து இல்லையா?
சோட்டா ராஜன், விஜய் மல்லையா, நிரவ் மோடி, லலித் மோடி இவர்களெல்லாம் யார்? இந்துக்கள் தானே? இவர்களை தேசபக்தர்கள் என்று சொல்ல முடியுமா?
நமக்கு மேற்கில் இருக்கும் அண்டை நாட்டுடன் தீரமாக போரிட்டு இந்தியாவின் உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருதை 1965 இல் பெற்ற ஹவில்தார் அப்துல் ஹமீது உங்கள் நினைவுக்கு வரவில்லையா?
மரணத்திற்கு பின் மகாவீர் சக்ரா விருதை 1947 இல் பெற்ற பிரிகேடியர் முகம்மது உஸ்தானும் , 1965 இல் பெற்ற லெப்டினன்ட் கர்னல் சலீம் சலெப்பும் உங்கள் நினைவுக்கு வரவில்லையா?
1971 பாகிஸ்தான் போர் வெற்றியை சிறப்பாக கொண்டாடும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு அப்போதைய இராணுவத் தளபதி ஒரு பார்சி என்பது தெரியாதா?
1965 போர் கதாநாயகனாக கொண்டாடப்பட்டவர் ஒரு சீக்கியர் என்று தெரியாதா?
1971 இல் டாக்காவில் பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் AAK நியாஜி அய் சரணடையச் செய்தவர் ஒரு யூதர் என்பது தெரியாதா?
இந்துக்கள் இயல்பாகவே தேசபக்தர்கள் என்பதும் மற்றவர்கள் அப்படி இல்லை என்பதும் உண்மை இல்லை என்பது மட்டுமல்ல அது ஒரு கெட்டபுத்தி.
இப்படிச் சொல்வது மக்களை மதத்தின் அடிப்படையில் பிரித்து மக்கள் மனதில் சக இந்தியர்கள் மேல் சந்தேகத்தையும் நம்பிக்கை இன்மையையும் வளர்க்கும் செயல்.
இந்திய நாட்டின் குடியுரிமையை விட்டுக்கொடுத்து இங்கிலாந்து கனடா அமெரிக்கா போன்ற நாடுகளின் குடியுரிமையை பெருமையாக வாங்கி வைத்திருக்கும் லட்சக் கணக்கான இந்துக்கள் பற்றி மோகன் பகவத் என்ன நினைக்கிறார்?
இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் நமது மொழியையும் மறந்துவிடுகிறார்கள். எந்த நாட்டில் பிறந்தார்களோ, எந்த நாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கிறார்களோ அந்த நாட்டின் மீது அன்பு செலுத்துகிறார்கள்.
மோகன் பகவத் சொல்கிறார் ஒருவர் ஒரு நாட்டை நேசித்தால், அது அந்த நிலப்பரப்பை நேசிப்பது அல்ல அங்குள்ள மக்களை நேசிப்பது, நதிகளை நேசிப்பது, கலாச்சாரத்தை நேசிப்பது, பண்பாட்டை நேசிப்பது.
இதை சரியென்று எடுத்துக் கொண்டாலும் இது இந்துக்களுக்கு மட்டும் பொருந்தாது, இந்த நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும்.
இதுவே பிரெஞ்சுக் காரர்களுக்கும், ஜெர்மானியர்களுக்கும், நைஜீரியர்களுக்கும் பொருந்தும்.
நமது நாடு உயிர்ப்புடன் வளர வேண்டுமென்றால், தேசபக்தி இந்துக்களுக்கான பண்பு என்று சொல்லக்கூடாது. அவர்களை சிறப்பு குடிமக்களாக கருதக்கூடாது.
இந்த நாட்டில் பிறந்த அனைவரும் ஜாதி மத பேதமற்று இந்தியர்கள் என்று ஒற்றுமையாக வாழவேண்டும். இல்லையென்றால் நமக்கும் யுக்கோஸ்லேவியாவிற்கு ஏற்ப்பட்ட நிலைமை உண்டாகும்.
------------------------------------
கருத்துகள்