Subbiahpatturajan
#Ruralgame
#Ruralgame
முன்பெல்லாம் ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் ஆடிப்பெருக்கு , ஆடி அமாவாசை ஆரம்பிக்கும் போதே நெல்லை பகுதி கோயில் மந்தை திடல்களில் நடக்கும் தேங்காய் போர் படு பிரசித்தம்.
அது என்ன தேங்காய் போர்...தெரியாதவர்களுக்காக..
சேவல் சண்டை, எருது விடுதல் (சல்லிக்கட்டு) மாதிரி
போர் கிராமங்களில் நடக்கும் படு சுவாரசியமான அதே நேரம் வில்லங்கமான விளையாட்டு.
ஆம் தோல்வியடைந்து செல்பவர்களை ஜெயித்தவர் கிராமத்துக்கே உரிய நக்கல் , நையாண்டியோடு கேலி செய்யும் போது தேங்காய் போரால் பல மண்டைகள் உடைந்த சம்பவங்களும் நடந்ததுண்டு..
தேங்காய்ப்போர் இதனை போர் விடுதல் என்ற பெயரிலும் அழைப்பார்கள் .. இருவர் கலந்து கொள்ளும் விளையாட்டு.. எதிரெதிர் திசையில் சம இடைவெளியில் இருவர் நின்று கொண்டு அவரவர் கையில் இருக்கும் தேங்காயினை உருட்டி ஒன்றோடொன்று மோத செய்வார்கள்..
யார் தேங்காய் உடைந்தோ அல்லது தண்ணீர் கசிந்தோ காணப்பட்டால் அவர் தோல்வியடைந்தவராக கருதப்படுவார்.. வெற்றி பெற்றவர் உடைந்த தேங்காயை எடுத்து கொள்வார்.சில இடங்களில் தேங்காயின் மீது பந்தய பணமும் கட்டப்பட்டு தேங்காய்ப்போர் நடப்பதுண்டு..
அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேங்காயின் கடினமான ஆண்சிரட்டை மூக்கு பகுதி எதிரணி வீரரின் தேங்காயை தாக்கும் படி விடுவார்கள்.
போர் தேங்காயை வாங்குவதற்காகவே நெல்லை, தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி என்ற ஊருக்கு சென்று பிடித்த தேங்காயை அதிக விலை கொடுத்து வாங்கி நெல் வயல் சேற்றில் மூன்று நாட்கள் மூழ்க வைத்து பதப்படுத்தி தேங்காய் போர் விளையாட்டுக்கு பயன்படுத்துவார்கள்.
தமிழ் நாட்டில் விளையும் தேங்காய்களில் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதி தேங்காயின் சிரட்டையும் தேங்காய் பருப்பும் அதிக அடர்த்தி கொண்டதால் அத்தனை மவுசு அந்த பகுதி தேங்காய்க்கு..
உடைந்த தேங்காயை சோகத்தோடு தோல்வியடைந்தவன் பார்க்கும் போது.. ஏலேய் ஒன்னோட மண்ட (தலை) உங்கக்காவோட மண்ட மாதிரியே ஒன்னோட தேங்காயிலும் ஒண்ணுமில்லையேடேய் மாப்ளேய் ன்னு கிண்டலடித்த மச்சானின் மண்டையை மைத்துணன் பிளந்த சம்பவங்கள் கிராமங்களில் முன்பு நிறைய உண்டு.
கிராமத்து விளையாட்டுகள் அத்தனை சுவாரசியமானவை.. ஜெயிக்க வேண்டும் என்ற வெறியோடு கடைசி வரை உணர்வை விட்டு கொடுக்காமல் விளையாடும் கபடி, சிலம்பம், அடிமுறை சுவடு, தேங்காய் போர் என்ற எத்தனையோ கிராமத்து விளையாட்டுக்கள் இன்றும் கிராமங்களில் நடப்பு நகரத்து இளம் தலைமுறைகளுக்கு தெரியாமல் இருக்கின்றன..
கருத்துகள்