#howtousesalt
#howtousesalt
*உப்பை உணவுகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா என்ன?
*வேறு சில விஷயங்களுக்காக உப்பு பயன்படுகிறதே, அதனை அறிவோமா?
அரிசியில் சிறிது உப்புத் தூளைக் கலந்து வைத்து விட்டால், எத்தனை நாட்கள் சேமித்து வைத்திருந்தாலும் அது புதிதாகவும் புழுப் பூச்சிப் பிடிக்காமலும் இருக்கும்.
பாதம் நனையும் அளவுக்கு ஒரு அகலமான பாத்திரத்தில், மிதமான சூட்டில், வென்னீர் எடுத்து, அதில் கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, 10 நிமிடங்கள், பாதங்களை நீரில் வைக்கவும்.
இதை, தொடர்ந்து செய்து வந்தால், கால்கள் மிருதுவாகவும், பளிச்சென்றும் இருக்கும். கால் வலி இருந்தாலும் பறந்து போகும்.
கேரட், பீட்ரூட் வாடிப் போனால், நறுக்குவது சிரமமாக இருக்கும். அவற்றை, உப்பு கலந்த நீரில், சிறிது நேரம் போட்டு வைத்தால், ப்ரஷ்ஷாகி விடும்; நறுக்குவதும் எளிதாக இருக்கும்.
ஒரு பக்கெட் தண்ணீரில், ஒரு கப் கல் உப்பு சேர்த்து, அதில் ஜீன்சை ஊற வைத்து பின் துவைத்தால், கலர் மாறாமல் அப்படியே நீடித்திருக்கும். முதல் முறை மட்டுமல்ல, ஒவ்வொரு முறை துவைக்கும் முன்பும் இப்படி செய்யலாம்.
பண்டிகைக்கு செய்த பலகாரங்கள் மீதமிருந்தால், நீண்ட நாட்கள், அவை சிக்கு வாடை அடிக்காமல் இருக்க, துண்டு துணியில், ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு, பலகாரம் வைத்துள்ள பாத்திரத்தில், பட்சணத்திற்கு அடியில் போட்டு வைக்கவும்.
குத்து விளக்கை, முதலில் பழைய செய்தித்தாளால் துடைத்து, பின், புளி மற்றும் உப்பால் தேய்த்து கழுவினால், எண்ணெய் பிசுக்கு நீங்கி, விளக்கு, 'பளிச்'சென்று மின்னும் .
புடவைகளுக்கு அடிக்கும் பால்ஸ்களை, முதலில் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து, உலர வைத்து, பின் அயர்ன் செய்து தைத்தால், சாயமும் போகாது; ஓரமும் சுருங்காது.
சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியில் நீர் போகாமல் அடைத்துக் கொண்டிருக்கிறதா... சிறிது கல் உப்பை, இரவில் போட்டு வையுங்கள். காலையில் நீர் அடைப்பு இருக்காது.
ப்ரிஜ்ஜில் இருக்கும் உறைகலனில் சிறிது கல் உப்பை துாவி வைத்தால், ஐஸ் கட்டி டிரேக்களை எளிதில் எடுக்கலாம். பின்னரும் சரியாக வரவில்லை என்றாலும் வீட்டில் குழாய் தண்ணீரில் நனைத்து எடுத்தாலே சிறந்த பனிக்கட்டி கிடைத்தது விடும்.
சட்டைக் காலர்களில் அழுக்கு படிந்திருந்தால், சிறிது பொடி உப்பை, அழுக்கு உள்ள பகுதிகளில் பூசி, சிறிது நேரம் கழித்து, பிரஷ்ஷில் தேய்த்தால், அழுக்கு நீங்கி விடும்
இரும்புப் பொருட்களில் துருப்பிடித்திருந்தால் அவற்றின் மேல் உப்பு கொண்டு தேய்த்தால் பளபளப்பாகிவிடும்.
பட்டுத் துணிகளைத் துவைக்கும் போது நீரில் சிறிது உப்பைக் கலந்து கொண்டு அதில் துணிகளை அலச வேண்டும். பட்டுத்துணியின் மிருதுத் தன்மையும் நிறமும் மாறாமல் இருக்கும்.
வீட்டில் தரையைக் கழுவும் போது சிறிது உப்பை நீரில் கலந்து கழுவினால், தரை காய்ந்த பின்பு ஈக்கள் தரையில் மொய்க்காது.
சுத்தமான நெய்யில் ஒரு சிறு கரண்டி அளவு உப்பைப் போட்டு முழுவதையும் சூடுபடுத்தி வைத்தால் நெய் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
சமையல் பாத்திரங்களில் வெங்காய வாசனை போகாமல் இருந்தால் உப்பு கலந்த சுடுநீரில் அப்பாத்திரத்தைக் கழுவினால் அந்த வாசனை போய் விடும்.
வீட்டின் முன்னும் பின்னும் தேவையில்லாத புல் செடிகள் வளர்ந்து வந்தால் அவற்றை சரி செய்ய அயோடின் உப்பை தூவினாலும் சரி தண்ணீரில் தெளித்தாலும் இரண்டே நாட்களில் புற்கள் வளராது.
நீண்ட பயணத்தால் கால் களைப்பு ஏற்பட்டு இருந்தால் சுடுநீரில் சிறிது உப்பைப் போட்டு அந்த உப்புச் சுடுநீருக்குள் கால் பாதங்களைச் சிறிது நேரம் வைத்து இருங்கள். கால் களைப்பு காணாமல் போய் விடும்.
துணியில் மைக்கறை அல்லது இரத்தக்கறை இருந்தால் அந்தக் கறையின் மேல் உப்பைத் தேய்த்துச் சுடுநீரில் அலசுங்கள் கறை அகன்று விடும்.
பாம்பு, பூரான் போன்ற வல்லூறுகள் வராமலிருக்க வீட்டை சுற்றி கல்லுப்பினை முன்னோர்கள் தூவினர் என்பது பலர் அறிந்ததே..
கடுகு எண்ணெய்யில் உப்பைக் கலந்து பல் துலக்கினால் பல் உறுதி பெறும்.
குக்கரின் அடியில் படிந்திருக்கும் கரையைப் போக்க, வெறும் குக்கரை அடுப்பில் வைத்துச் சூடேற்றுங்கள். பின்னர் உப்புத் தூளை உள்ளே போட்டு சிறிது நேரத்தில் இறக்கி அடிப்பாகத்தைக் சுத்தம் செய்தால் கரை இருக்காது....!!!
எனவே தேவையான அளவு உப்பின் நன்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி.
கருத்துகள்