“அடுத்த விசாரணைச் சாவு (தங்களுக்கு பால் தர மறுத்திருக்கும்) பால்காரர்களுத்தான்”
காவல்துறை சீர்திருத்தம்:
குடிமைச் சமூகத்தைத் தூக்கத்திலிருந்து எழுப்புவோம்!
கணவன்-மனைவி உறவு போன்றதுதான் காவல்துறை-பொதுமக்கள் உறவும்: You can’t live WITH them or WITHOUT them. சேர்ந்து வாழவும் முடியாது, விட்டு விலகவும் முடியாது. காவல்துறை இல்லாமலும் முடியாது, இருந்தாலும் முடியாது.
தேர்தல்கள் பணமயமாதல், சனநாயகம் பலவீனமடைதல், சகிப்புத்தன்மை இல்லாமற் போதல், வெறுப்பு வேரூன்றிப் பரவல், பணவெறித் தலைவிரித்தாடல் என நாடு ஒரு மோசமான பாசிச அரசியல் பாதையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்,
காவல்துறையைக் கேள்வி கேட்காமல் விடுவது மிகப்பெரும் ஆபத்தாகிவிடும்.
ஏற்கனவே கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் பெரும்பாலானவை மக்களின் உரிமைகளைப் பறித்து, காவல்துறையின் அதிகாரத்தை அதிகரித்து, ஒரு பாசிச முன்னோட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன:
ஊரடங்கு,
வீட்டில் அறிவிப்புப் பதித்தல்,
தனிமைப்படுத்துதல்,
தடுப்புக்களமைத்து சுற்றிவளைத்தல்,
நடமாட்டத்தைத் தடுத்தல்,
முகாம்களில் அடைத்தல்,
தொடர்பிலிருந்தவர்களைத் தேடல்,
கண்காணிப்பில் வைத்திருத்தல்,
வேவு பார்த்தல்,
வான்வெளி (ட்ரோன்) மேற்பார்வை,
என கொரோனாவோடு வாழும் காலம், வருங்கால பாசிச வாழ்க்கைக்கானப் பயிற்சிக்காலம் போலவேத் தோற்றமளிக்கிறது.
முசோலினியின் கருப்புச்சட்டைப்படை போல, ஹிட்லரின் மூன்று பிரிவுகளடங்கிய கொடூரமானக் காவல்துறை போல, இந்தியாவின் நிலைமையும் மாற நாம் அனுமதிக்கக்கூடாது.
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”
என்பது வள்ளுவம்.
காவல்துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை பொதுமக்களும், காவல்துறையினரும் ஏற்றுக்கொள்கிறோம். காவல்துறையினரின் மனைவியர்/கணவர்கள், குழந்தைகள் கட்டாயமாக ஏற்றுக்கொள்வார்கள். தங்கள் அப்பா, அம்மாவை அதிக நேரம் பார்க்கவே அவர்கள் ஆசைப்படுவார்கள்.
ஆனால் மத்திய, மாநில அரசுகளை, மற்றும் ஆளும் வர்க்கத்தினரைப் பொறுத்தவரை, தற்கால நிலையேத் (status quo) தொடர்வதையும், விசுவாசமான, கீழ்படிதலுள்ள, கேள்விகேட்காத காவல்துறை இரும்புக்கரம் கொண்டு மக்களை அடக்குவதையும்தான் விரும்புகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், எழுச்சிகள், கிளர்ச்சிகள், புரட்சிகள் என்று எதுவும் எழாமல், அத்தனைப் பேரையும் அடித்தமர்த்தி, அவரவர் இடங்களில் அப்படியே வைத்திருப்பது எவ்வளவு பெரிய சேவை!
ஆங்காங்கே சில பாலகிருஷ்ணன்களும், ரகுகணேஷ்களும் அத்துமீறி நடப்பது முன்னவர்களைப் பொறுத்தவரை பெரியப் பிரச்சினையே அல்ல. உண்மையில், அதை அவர்கள் பெரிதாக வெறுத்து நிறுத்தவும் முயல்வதில்லை. ஏனென்றால், காவல்துறையைப் பற்றிய ஓர் ஆழமான அச்சம், வழக்குகள் மீதான பயம், நீதிமன்ற அலைக்கழித்தல், சிறைவாசச் சிரமங்கள் போன்றவை மக்களைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சக்திமிக்க உபாயங்கள் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.
சாத்தான்குளம், வீரகேரளம்புதூர் என்று தமிழகம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் ஒரு காவலர் “அடுத்த விசாரணைச் சாவு (தங்களுக்கு பால் தர மறுத்திருக்கும்) பால்காரர்களுத்தான்” என்று முகநூலில் பதிவிடுகிறார். அவரது முகநூல் கணக்கின் கடவுச்சொல் பல நண்பர்களிடம் இருந்ததால், அவர்களில் ஒருவர் அப்படிப் பதிவிட்டுவிட்டார் என்று காவல்துறை சப்பைக்கட்டுக் கட்டுகிறது.
நீண்டகாலமாக புரையோடிப் போயிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு வெறுமனே களிம்பு தடவினால் போதாது; தீவிர அறுவை சிகிச்சைத் தேவைப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளும், ஆளும் வர்க்கமும் இந்த அறுவை சிகிச்சையைச் செய்ய விடமாட்டார்கள். நோயாளி திடகாத்திரமாகத்தானே இருக்கிறார் என்று நம் மீது பாய்வார்கள்.
ஜெயராஜ், பென்னிக்ஸ், முருகேசன் என்று பட்டியல் நீண்டுகொண்டிருக்கும் நிலையில், பொதுமக்களாகிய நாம்தான் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமானதாக இருக்கும், இயங்கும் காவல்துறையை மக்களுக்கானதாகவும் மாற்றியாக வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச்சட்டம், சர்வதேச ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் நமக்கு உறுதியளித்திருக்கும் நமது மனித உரிமைகளை காவல்துறை மதித்து நடக்கச்செய்ய வேண்டும். மனநலம் குன்றிய, இரத்தவெறிபிடித்த, காமவெறிபிடித்தக் காடையர்கள் சிலரால் மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் ஆபத்து நேர விடக்கூடாது.
குடிமைச் சமூகம் தூசுதட்டப்பட வேண்டும். இன்றைக்கு ஒரு சில கட்சிக்காரர்கள் நாளிதழ்களில் பெரிதாக விளம்பரம் வெளியிட்டு, அமர்க்களம் பண்ணி, அதிரடியாக ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டுக்கு வருகிறார்கள், வருந்துகிறார்கள், ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள் அதேபோல, சில சாதித் தலைவர்கள், சங்கங்கள் ஜெயராஜ், பென்னிக்சை தம்மவர் என்று அடையாளப்படுத்திக்கொண்டுக் கொதிக்கிறார்கள். இவர்களெல்லாம் இவ்வளவு நாட்கள் எங்கேப் போயிருந்தார்கள்? என்ன செய்துகொண்டிருந்தார்கள்? சாத்தான்குளம் வணிகர் சங்கம் என்ன செய்துகொண்டிருந்தது? அந்த ஊரில் வழக்கறிஞர்கள், ஊடகர்கள் யாருமே கிடையாதா? பிரச்சினை முகிழ்க்கும்போதே ஏன் தலையிடவில்லை?
சாத்தான்குளம் காவல்நிலையத்திலிருந்து கொலைகாரர்கள் “லுங்கி வாங்கிவிட்டு வா” என்று மீண்டும் மீண்டும் ஆள் அனுப்பி லுங்கி பெற்றுக்கொண்டிருந்த நிலையில், சகோதரி செல்வராணி அவர்களின் தலைமையில் பத்துப் பெண்கள் போய் இங்கே என்ன நடக்கிறது, ஏன் இத்தனை லுங்கிகள் கேட்கிறீர்கள் என்று ஏன் கேட்க முடியவில்லை?
காவல்துறை மீதிருக்கும் அதீத பயம், அச்சம், நடுக்கம். நமக்கேன் வம்பு என்கிற கோழைத்தனம். அவர்கள் பிரச்சினயை அவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என்கிற கடைந்தெடுத்த சுயநலவாதம். நமக்கு ஒன்றும் நிகழாதவரை நாம் ஏன் எழுந்து நிற்கவேண்டும் என்கிற கள்ளத்தனம். கையாலாகாத்தனம்.
சபாஷ்! பாசிஸ்டுகளும், அவர்களின் பாசிசக் கையாட்களும் மக்களிடம் எதிர்பார்க்கும், விரும்பும் அற்புத குணாதிசயங்கள் இவைதான்.
இப்படியே தொடரப் போகிறோமா? அல்லது குடத்திலிட்ட விளக்காகக் கிடக்கும் நமது குடிமைச் சமூகத்தைப் புனருத்தாரணம் செய்யப் போகிறோமா?
நன்றி அண்ணா....
சுப.உதயகுமார்
பச்சை தமிழகம் கட்சி.
கருத்துகள்