உடல் உறுப்பு தானம்
இந்தியாவில் ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பினால் அவர் உள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்று அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும்
அல்லது
Donar Card எனும் தமிழக அரசின் அடையாள அட்டையை www.tnos.org அல்லது www.transtan.org என்ற இணையதளப் பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதன்மூலம் அரசு / தனியார் என எந்தவொரு மருத்துவமனையில் ஒருவர் மூளைச்சாவு அடைந்தாலும் அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டால் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வழியாகத்தான் உறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்படும்.
உறுப்பு தானத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தடுக்கவும் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் இருக்கவும் தமிழக அரசின் உறுப்பு தான திட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இணைந்துள்ளன.
இந்த மருத்துவமனைகளில் யாருக்காவது மூளைச்சாவு ஏற்பட்டால் உடனடியாக உறுப்புதான ஒருங்கிணைப்புக் குழுவுக்குத் தெரிவிப்பார்கள்.
இக்குழுவில் உள்ளவர்கள் அந்த மருத்துவமனைக்கு சென்று மூளைச்சாவு ஏற்பட்டவரின் உறவினரிடம் பேசி அவர்களின் அனுமதி கிடைத்ததும் அதற்கான உறுதி மொழி கடிதத்துடன் உறுப்புகளைப் பெற்றுக் கொள்வர்.
மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், இணையம், இரைப்பை, சிறுகுடல், கண்கள், எலும்புகள், நரம்புகள், கைகள், விரல்கள், தோல் ஆகியவற்றை தானமாகப் பெறலாம்.
இயற்கையாக மரணமடைந்தவர்களிடம் இருந்து கண் விழித்திரை, இதய வால்வுகள், தோல்கள், எலும்புகள், தசை நார்கள், நரம்புகள் ஆகியவற்றை தானமாகப் பெறலாம்.
இப்படி ஒருவரிடமிருந்து 25 வகையான திசுக்களையும் உறுப்புகளையும் தானமாகப் பெற முடியும்.ஓர் ஆரோக்கியமான மனிதனால் 10 நபர்களுக்கு தமது உறுப்புகளை தானமாகத் தர முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இறந்தவரின் உடல் உறுப்புகளைப் பெறுவதைவிடவும் மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து உறுப்புகளைப் பெறுவது மிகவும் கடினமானது.
விபத்தில் சிக்கியவரின் மூளை செயலிழந்த நிலையில் ஒருவரின் உடல் செயலற்றுப் போவதை கோமா நிலை என்பர்.
இதிலிருந்து மீண்டுவர முடியாத நிலைதான் மூளைச்சாவு எனப்படுகிறது.
மூளைச்சாவுக்கு பெரிதும் சாலை விபத்துக்களே காரணமாகின்றன.
மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் துடித்தாலும் அவரால் சுயமாக சுவாசிக்க முடியாது.
ஆகையால்தான் மூளைச்சாவு அடைவது மரணத்துக்குச் சமம் என்கிறார்கள மருத்துவர்கள்.
மூளைச்சாவு அடைந்தவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படாவிட்டால் சில மணி நேரங்களில் அவர் இறந்துவிடுவார்.
எனவே அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு மூளை தவிர பிற உறுப்புகள் தற்காலிகமாக பாதுகாக்கப்படுகின்றன.
இந்த இடைவெளி நேரத்தைப் பயன்படுத்தித்தான் ஒருவரின் உடலிலிருந்து உறுப்புகள் எடுக்கப்பட்டு பிறருக்குப் பொருத்துகிறார்கள்.
அதே நேரத்தில் ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என மருத்துவர் ஒருவரால் மட்டும் தன்னிச்சையாக அறிவித்துவிட முடியாது.
பலகட்ட சோதனைகளுக்குப் பிறகுதான் ஒருவர் மூளைச்சாவு அடைந்தாரா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியும்.
அவ்வாறு மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து பெறப்படும் உறுப்புகள் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள்ளாக கட்டாயம் பிறருக்குப் பொருத்தப்பட வேண்டும்.
அதனால்தான் விமானம் மூலம் உடல் உறுப்புகள் பலவும் நேர விரயமின்றி எடுத்து வரப்படுப்படுகின்றன.
கருத்துகள்