Subbiahpatturajan
#சினார்தமிழன் #kuttystory #kanyakumari #tamil
ஓலைப்பெட்டி மிட்டாய்..
2000 ஆம் ஆண்டு துவங்குவதற்கு முன்பு வரை உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா, வள்ளியூர் முருகன் கோயில் கார்த்திகை மாத தெப்பத்திருவிழா, வடக்கன்குளம் முருகன் கோயில் சித்ராபவுர்ணமி திருவிழா பார்க்க சென்றால் திருவிழா சீசனுக்கு வரும் மிட்டாய் கடைகளில் இந்த பனையோலை பெட்டிகள் தொங்க விட பட்டிருக்கும்..
அப்பா திருவிழாவுக்கு சென்று ஓலைப்பெட்டியில் கட்டி வாங்கி வரும் மிட்டாய் பெட்டியை பார்த்து...
"அப்பா பண்டம் வாங்கிட்டு வந்துருக்காவ " என மகிழ்வோடு சொன்ன 90'S ஹிட்ஸ்களுக்கு தெரியும் ஓலைப்பெட்டி மிட்டாய் பற்றி....
தேன்குழல் மிட்டாய் அல்லது ஏணிப்படி மிட்டாயை கருப்பு கலர் இரும்புச்சட்டியில் அதே இரும்பு சட்டி கலரில் இருக்கும் மாஸ்டர் அண்ணாச்சி விறகு அடுப்பு தீ மூட்டி துளையிட்ட செம்பில் மாவை ஊற்றி டிசைனாக சுடுவதை பார்க்கவே கூட்டம் கூடும்.. பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரின்னு சொல்லுலவாங்களே அதே மாதிரி...
சுடச்சுட இருக்கும் அந்த தேன்குழல் மிட்டாயை அந்த ஓலைப்பெட்டியில் நிரப்பி மெல்லிய சணல் மூலம் கட்டி தருவார்கள். இரண்டு நாட்கள் திறக்காமல் வைத்தாலும் லேசான தேவையான காற்று செல்ல ஓலைப்பெட்டியில் இடைவெளி இருப்பதால் மிட்டாய் நமத்தோ அல்லது கெட்டோ போகாது..
சூடான பொருளை தற்போதைய நாகரீக கேரிபேக் அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து கட்டுவதால் பாலிஎத்திலீன் என்ற நச்சு உருவாகி தின்பண்டத்தில் கலந்து உடலுக்குள் சென்று ஊறு விளைவிப்பது போல் ஓலைப்பெட்டி மனித உடலுக்கு ஊறு விளைவிப்பதில்லை..
ஓலைப்பெட்டியில் நிறைய வகை உண்டு.. பெரிய சைஸ் பெட்டியை கடவம் அல்லது கடவாபெட்டி என அழைப்பார்கள் .. 20 கிலோ கொள்ளளவு கொண்டது.. பனை மட்டையை கழுத்து பகுதியில் வட்டமாக வளைத்து பனை ஓலையால் பின்னியிருப்பார்கள்..
மிட்டாய் வாங்கும் இந்த ஓலைப்பெட்டியை பிளாப்பெட்டி என அழைப்பார்கள்.. பிளவு ஓலைப்பெட்டி அதாவது ஓலையை பிளந்து பின்னிய பெட்டி என்பதன் அர்த்தமே பிளாப்பெட்டி .. சரியாக ஒரு கிலோ எடையை தாங்கும்..
தன் மகனுக்கு அதிக நகை சீதனமாக கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் சீதனமாக எதிர்பார்த்து பெண் தேடும் பையனின் அம்மாவை...
" அந்த மச்சுவீட்டுக்காரி அலப்பு பிடிச்சவப்பா... மொவனுக்கு பிளாப்பெட்டி நிறைய நகை போடுற பொண்ணு வேணுமுன்னு வருகிற நல்ல சம்மந்தத்த எல்லாம் கழிச்சு விட்டுட்டு இருக்குதா..
இப்படியே போனா அந்த பயலோட கதி காமராஜர், விவேகானந்தர் கதை மாதிரி தான் ஆவ போவுது பாறேன் மக்கா " ன்னு ஊருக்குள் முன்னாடி பிளாப்பெட்டி கதையை சகஜகமாக எடுத்துக்காட்டாக பேசுவதுண்டு..
பயன்படுத்தி முடித்து தூர எறிந்தாலும் மனித உடலுக்கும் , மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு தராமல் மக்கி போய் விடுவது ஓலைப்பெட்டி..
பிளாஸ்டிக் உபயோகத்தை தாறுமாறாக பயன்படுத்துவதால் பிளாஸ்டிக் மக்கி போகாமல் நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் வழித்தடங்களை அடைத்து மண்ணை மாசுபடுத்துவது அனைவரும் அறிந்தது தான்..பிளாஸ்டிக் உபயோகத்தின் கெடுதலை மக்கள் அவர்களாக உணரும் வரை பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த முடியாது...
ஆனால் இம்மாதிரியான ஓலைப்பெட்டி, காகிதப்பை, துணிப்பை, சணல்பை போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்காவாவது செய்யலாம்... பூமி மாசு அடைவதை தவிர்க்கலாம்.. பூமியை நாம் பாதுகாத்தால் பூமி நம்மை பாதுகாக்கும்..
முன்பு ஓலைப்பெட்டியில் தேன்குழல் மிட்டாய் சாப்பிட்ட நினைவுகளை நினைத்து பார்த்த நியாபகத்தில் எழுதிய பதிவு...
கருத்துகள்