முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இதை படிக்கும் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்....

Subbiahpatturajan

Cinartamilan

நாம் ஒரு சிறிய  நகை சேதமடைந்து விட்டால் அதை மாற்ற செல்லும்போது, இப்போதெல்லாம் அதை அப்படியே வாங்கி கொள்வதில்லை. 

இதை படிக்கும் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். 

நாம் ஒரு பவுன் எடை கொண்ட நகையை கொண்டு சென்றால் ''நாங்கள் இதை இப்படியே வாங்கி கொள்ளமாட்டோம். எங்களுக்கு சுத்த தங்கம் தான் வேண்டும். எனவே அதை உருக்கி சுத்த தங்கமாக மாற்றி அதன் பின்னரே எடை போட்டு அதற்கான விலையினை நிர்ணயம் செய்வோம்'' - என்று சொல்லி  நகையை வாங்கி உள்ளே கொண்டு சென்றுவிடுவார்கள். 

அதில் சேர்க்கப்பட்டிருந்த செம்பு, கல் எடை, அழுக்கு என்று ஒரு எடையை கழித்து எட்டு கிராம் கிட்டத்தட்ட ஏழு ஆறு கிராமிற்கு சுருக்கி இருப்பார்கள். 

நாம்  நம்மிடம் மதிப்பு  மிக்க பொருளாக  இத்தனை நாள் பாதுகாத்து வைத்திருந்த ஒரு பொருளை,  ''அட இதெல்லாம் ஒரு  பொருளா..'' என்ற கண்ணோட்டத்துடன் அவர்கள் பேச்சு இருக்கும். 

எதையோ எதிர்ப்பார்த்து பழைய நகையை மாற்ற சென்ற பாவப்பட்ட எளிய மனிதர்கள் முகம் சுருங்கி அமர்ந்திருப்பதை பார்க்கும்போதே மனதுக்கு கஷ்டமாக இருக்கும். 

ஒரு பவுன் நகையிலேயே இத்தனை தில்லாலங்கடி வேலைகள். 

கோயில்களில் பக்தர்கள் வழங்கும் நகைகள் ஏராளம். 

அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரத்தில் இருக்கும். 

அவை உருக்காலைக்கு அனுப்பபடும்போது அது எந்த அளவுக்கு சரியான முறையில் கணக்கிடப்பட்டு சுத்த தங்கமாக மாற்றப்பட்டு வெளியில் வரும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது. 

பாதி தங்கமாவது திரும்ப வருமா.. என்பதே கேள்விக்குறியாக உள்ளது. 

கட்டிகளாக மாற்றப்படும் தங்கம் எங்கே எப்படி வைப்பீடு செய்யப்பட உள்ளது, 

அதன் வைப்பீட்டாளர் யார், வைப்பு நிதி வருவாய் எதற்கு பயன்படுத்த போகிறார்கள் என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி. 

பயன்படுத்தாத நகைகளில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகள் மட்டும் கிடையாது... 

சில உடைந்த பயன்பாட்டில் இல்லாத பழம்பெரும் வேலைப்பாடமைந்த பொக்கிஷங்களாக காக்கப்பட வேண்டிய நகைகளும் உண்டு.

பயன்பாட்டில் இல்லை என்பதால் அதையும் உருக்கி கட்டிகளாக்க போகிறார்களா?  

அவற்றின் மதிப்பு தங்கத்தின் மதிப்பை விட பல கோடி பெரும். 

அவை உருகாலைக்கு செல்கிறதா, இல்லை வேறு நாடுகளுக்கு செல்கிறதா... என்பது என்ன நிச்சயம்?  

பத்து பவுன் நகையை எடுத்துக்கொண்டு பத்து பவுன் சுத்த தங்கத்தை கோயில் கணக்கில் சேர்த்து கொள்வது மிக சுலபம். எனவே கலைநயமிக்க பல கோடி மதிப்புள்ள நகைகளை மொத்தமாக கையில் எடுத்து கொண்டு அதற்கான தங்கத்தை கோயில் கணக்கில் சேர்த்திட இது மிக நல்ல வாய்ப்பு அல்லவா? 

உருக்கி தங்கமாக்கப்பட பட வேண்டிய நகை எவை , பயன்படுத்தப்பட வேண்டிய  நகைகள் எவை என எதன் அடிப்படையில் பிரிக்க போகிறார்கள், அதை செய்யப்போவது யார்?

நகைகள் செய்ய எத்தனையோ ஆலைகள் தமிழ் நாட்டில் இருக்கும் போது மும்பை உருக்காலையை  ஏன் தேடி செல்ல வேண்டும்?  

தமிழ் நாட்டில் ஒரு பட்டறை போட்டு அதை செய்யமுடியாதா?


பல நாட்டு மனிதர்களும் நிழல் உலக தாதாக்களின் இருப்பிடமான மும்பையிலிருந்து பல நாடுகளை ஈஸியாக தொடர்பு கொள்ள முடியும் என்பதாலா? 
இதற்கெல்லாம் மேலாக பக்தர்கள் காணிக்கையாக ஒரு நகையை சாமிக்கு செய்வது என்பது எத்தனை நம்பிக்கையுடன் கஷ்ட பட்டு சேர்த்த பணத்தில் அர்ப்பணிக்க படுகிறது. 

உதாரணமாக ஒரு ஏழை பெண்ணின் கணவன் தீராத வியாதியினால் மரணத்தின் விளிம்பில்  அவதியுறுகிறான், அவன் மனைவி தாலி வரம் கேட்டு மதுரை மீனாட்சியிடம் வேண்டுகிறாள். 
நல்ல சிகிச்சை, அந்த பெண்ணின் இடையறாத வேண்டுதல், இரண்டும் சேர்ந்து அவன் மீண்டும் ஆரோக்கியம் பெற்று நல்ல நிலைமைக்கு வருகிறான். 

அந்த பாமர  பெண் ஊர்கூடி மேளம் கொட்டி விண்ணவர்கள் வாழ்த்த தன் கணவன் அவள் கழுத்தில் கட்டிய தங்கத்தாலான  தாலியை கழற்றி விட்டு கணவன் கையால் மஞ்சள் கயிறை அணிவித்து கொண்டு திருமாங்கல்யதுடன் கூடிய நகையை அப்படியே மீனாட்சியம்மன் பாதத்தில் சமர்ப்பித்து நேர்ச்சையை முடித்து கோயில் உண்டியலில் காணிக்கையாக்குகிறாள். 

இது எத்தனை உணர்வுபூர்வமான செயல். 


அந்த பெண்ணை பொறுத்தவரை அவள்   அம்மன் பாதத்தில் சமர்ப்பித்த தாலி எப்போதும் அவள் பாதத்தில் இருந்து அவள்  கணவனை ஆண்டாண்டு காலம் வேலியாய் நின்று காக்கும் என்று தானே  நம்பிக்கை கொண்டிருப்பாள் . 

அவளை பொறுத்தவரை திருமணத்தில் கட்டப்படும் தாலி உயிர் அல்லவா?  

அதை கழற்றும் அளவுக்கு துணிச்சல் வருவது அந்த அம்மன் மீது கொண்ட அளவுகடந்த பக்தியால் அல்லவா?  

அந்த கோடான கோடி மதிப்புள்ள தாலியை வெறும் தங்கமாகவும் முதலீட்டு பொருளாகவும் பார்க்கும் அறங்கெட்ட துறைக்கு அதை உருக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது. 

.

சாமிக்கும் பக்தர்களுக்கும் இடையேயான பக்தியையும் நம்பிக்கையையும் காலில் போட்டு மிதித்து அவமானப்படுத்தும் செயல் அல்லவா?

ஆக மொத்தத்தில் ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது. 

இன்னும் இந்துக்கள் மவுனம் காப்பது மதியீனம். 

என்ன சொல்வதென்று தெரியவில்லை. 


மவுனமாக கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழி தெரியவில்லை . மனம் கதறுகிறது. கண்களில்  கண்ணீர் பெருக்கெடுத்து வழிகிறது . 
முருகன் பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட என் தாலியும் தங்க கட்டியாகி எங்கோ யார் வீட்டு லாக்கருக்கோ  செல்ல போவதை நினைத்து. 

இங்கே யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. 

எப்போதும் போல அவன் பாதமே சரணம்.

கருத்துகள்