Subbiahpatturajan
நான் வாத்துக் கூட்டத்தின் அங்கத்தினர்கள் அல்ல.,
"பிழைக்கத் தெரியாத ஆள்,
ஏமாளி,
திசைமாறிச் சென்றவர்,
சம்பாதிக்கத் தெரியாதவர்"
இந்தப் பட்டங்கள்தான் பலரும் எமக்கு இடும் பட்டங்களாக இருக்கின்றன.
இதில் இன்னும் சிலர், ஆரம்பத்துல நீயா நானா கோபிநாத், ரங்கராஜ் பாண்டேகூட ஒரே நிறுவனத்துல வேலை செஞ்சவர் நீங்க. ஏன் அவர்களைப் போல ஆகலை? என்ற கேள்விகள் வேறு கேட்கிறார்கள்.
இந்தக் கேள்விக்கு என் பதில் கேள்வி...
"என்னைக்காவது உங்ககிட்டயையோ, பொதுவெளியிலையோ நான், (நீயா நானா)கோபி போல, (சாணக்கியா)பாண்டே போல ஆக விரும்புகிறேன் அப்டின்னு சொல்லி இருக்கேனா? அப்டி ஆக விரும்பி முயற்சி செஞ்சு தோற்றுவிட்டேனா?
அப்டி ஒரு எண்ணம் என் கனவில்கூட வந்ததில்லையே. நான் ஏண்டா அவர்களைப் போல ஆகனும்?
அவர்கள் விரும்பிய இலக்கை அவர்கள் அடைந்தார்கள். அதை நோக்கி நான் செல்லவில்லை.
நான் விரும்பி நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இலக்கை நோக்கி அவர்கள் வரவில்லை.
அவ்வளவுதான்.
அது அவர்கள் பாதை. இது எமது இனத்தின் பாதை.
எதற்கு ஒப்பிடுகிறீர்கள்?
ஒப்பிட்டுப் பார்த்து ஜட்ஜ்மென்ட் செய்வது, பொதுப்புத்தி அடிமைத்தனத்தின் அடிப்படையில கூட்டம் அல்லது பெரும்பான்மை மக்கள் எதை, எந்த கருத்தை, எந்த இயக்கத்தை, கட்சியைப் பின்பற்றுகின்றனரோ, அதன் தவறுகளைப் பற்றி கேள்வி கூட கேட்காமல் கண் மூடித்தனமாக வாத்துக் கூட்டத்தைப் போல பின்பற்றுவது ஆகியவை சுய சிந்தனை, சுய மரியாதை எனும் தன் மதிப்புணர்ந்தவர் செய்யும் செயலல்ல.
நான் வாத்துக் கூட்டத்தின் அங்கத்தினர் அல்ல.
இந்த உலகில் ஒவ்வொரு தனி மனிதரிடமும் ஒரு தனித் தன்மை உள்ளது.
அதில் சிறந்த தனித் தன்மை கொண்டவனாக என்னைக் கூர் படுத்த விடாது முயன்று கொண்டிருக்கிறவன் நான்.
குடும்பம், குழந்தை, கடன் வாங்கி ஈஎம்ஐ-ல் வீடு கட்டுதல், கார் வாங்குதல், புகழ் பெறுதல் மட்டுமே வாழ்க்கையின் வெற்றி என்று கருதுபவர்களுக்கு பிற அறிவை நோக்கிய, சமூகத்தைப் பற்றிய, தனித்த ஞான, மெய்ஞான வெற்றிகளைப் பற்றி அறிய இயலாது. புதுமை பற்றி சிந்திக்க நேரமும், வாய்ப்பும் இருக்காது.
நீங்கள் வெற்றியாக எண்ணுபவை தேவையானவை என்றாலும்கூட தற்காலிகமானவை.
கோவிட் பெருந்தொற்றுகூட இந்த தற்காலிகம் என்பதை உணர்த்தியிருக்கிறது.
நான் தற்காலிகத் தேவையை மட்டும் நிறைவேற்றிக் கொள்ளப் பாடுபடுபவன் அல்ல.
அடுத்து,
சங்க பரிவார ஹிந்துத்துவத்தை ஆதரிக்கிற, திராவிடத்தை ஆதரிக்கிற பத்திரிகை, ஊடகவியலாளர்கள் எப்படி பணம் சம்பாதித்து, பெயரோடும், புகழோடும், வசதி வாய்ப்புகளோடும் இருக்கிறார்கள்.
ஆனால், நீங்கள் அந்த வாய்ப்பு இருந்தும், லட்சத்தில் மாத சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தும் பிழைக்கத் தெரியாது, ஏமாளியாக இருக்கிறீர்களே? தமிழ், தமிழர், தமிழியம், தமிழ்த் தேசியம் பேசித் திரிகிறீர்களே
எனும் கேள்வி.
இந்தக் கேள்வியின் நேரடித் தகவல்
"என்னையை, எங்களைப் போல அடிமையாக இருந்துவிட்டுப் போ. ஏன் மாற்றி யோசிக்கிறாய்? ஏன் அடிமைப் படுத்தும் முதலாளித்துவ எஜமானர்களை விட்டு விலகி யோசிக்கிறாய் ?"
என்பது மட்டும்தான்.
இவர்களில் பலர் பொதுவுடமைப் புரட்சியாளர்கள் கார்ல் மார்க்சையும், ஈவேரா பெரியாரையும் தங்கள் கடவுளர்கள் என்கிற ரீதியில் கூறிக் கொள்பவர்கள். அதுதான் உச்சகட்ட காமெடி.
கண்மூடிய மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாகும் கல்லாதவர்க்கும், இத்தகைய கற்றறிந்தவர்கள் ஆகும் அடிமைத்தனத்திற்கும் என்ன பெரிய வேறுபாடு?!
பல கற்றறிந்த பேராசிரியர்கள், முனைவர்கள் என்று அறியப்பட்டவர்களும், பத்திரிகை, ஊடகவியலாளர்களும்கூட அடிமைகளாகத்தானே இன்று பணம் படைத்த கட்சிகளின் துதிபாடிகளாக செயல்பட்டு வாழ்கிறார்கள்?!
நான் அடிமையாகத்தான் வாழ்வேன் என்று அடம்பிடிப்பவர்களுக்கு, அந்த சுகத்தை இழக்க விரும்பாதவர்களுக்கு அவர்களின் பார்வையில் நான் "பிழைக்கத் தெரியாத, திசை மாறிய ஏமாளியாகத் தெரிவதில்" வியப்பேது?
அப்படித்தான் தெரியும்.
மாற்றி சிந்தியுங்கள். பொய்யாகக் கட்டமைக்கப்படும் மாய வரலாற்றை நம்பி ஏமாறாதீர்கள்.
கார்ல் மார்க்சை. ஈவெரா பெரியாரை அவர்களின் தனித்த அறிவுப் பார்வையில், அவர்களை நீங்கள் உள்வாங்கியிருந்தால் இப்படிப்பட்ட கேள்விகளை என்னைப் போன்றவர்களிடம் கேட்க மாட்டீர்கள். கேட்க வேண்டிய தேவை உங்களுக்கு வந்திருக்காது.
ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுத் தீர்ப்பெழுதாதீர்கள்.
சிலரை மட்டும் வெற்றி பெற்றவர்கள் என்றும் அவர்களைப் போலவே எல்லோரும் ஆகுங்கள் என்று கூறாதீர்.
நீங்கள் குறிப்பிடும் வெற்றி, புகழை விடப் பல மடங்கு வெற்றிகளை ஈட்டும் பலரை இப்படித்தான் அவர்களின் தனித்த திறனில் முன்னேற விடாமல் தடுத்து விடுகிறீர்கள்
ஒவ்வொரு தனி மனிதரிடம் இருக்கும் சிறப்புத் தன்மையை மதியுங்கள்.
மானுடத்தின் தன்மதிப்பு, அறிவு, மாண்பு இதுதான்.
கருத்துகள்